Saturday, April 26, 2008

நரசிம்மருக்கு இப்படியும் ஒரு பெயர்


சித்தர்களில் ஒருவரான இடைக்காடரிடம் சில பக்தர்கள் பெருமாளின் அவதாரங்களில் உங்களுக்குப் பிடித்த மூன்று அவதாரங்களைச் சொல்லுங்கள். அவரையே நாங்கள் வழிபட விரும்புகிறோம்” என்றனர்.


உடன் இடைக்காடர் அவர்களிடம் “ஏழை, இடையன், இளிச்சவாயன்.. இவர்களை வணங்கி திருவிழா கொண்டாடுங்கள்.. உங்களைத் துன்பம் நெருங்காது..” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.


அவர் சொல்லியதன் விளக்கம் இதுதான்.


‘ஏழை’ என்பது ராமனையும், ‘இடையன்’ என்பது கண்ணனையும், ‘இளிச்சவாயன்’ என்பது நரசிம்மரையும் குறிக்கும்.


ராமன், தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்தவர். ஆனாலும், தந்தையின் சொல் கேட்டு வனவாசம் சென்று ஏழையாகவே வாழ்க்கை நடத்தினார்.


அவரே கிருஷ்ணாவதாரத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாகப் பிறந்தார்.


நரசிம்ம அவதாரத்தில் உக்கிரத்துடன் தன் வாயைத் திறந்து இரணியனை சம்ஹாரம் செய்தார். இதை ‘இளித்தவாயன்’ எனக் குறிப்பிட்டார். ‘இளித்த’ என்றால் ‘வாயைத் திறந்த’ என்றும் பொருள் உண்டு.

‘சத்யமேவ ஜயதே’ சரியான சொல்தானா?

அசோகச் சக்கரத்தின் கீழ் ‘சத்யமேவ ஜயதே’ என எழுதப்பட்டுள்ளது. ‘வாய்மையே வெல்லும்’ என்பது இதன் தமிழாக்கம்.

இது சரியான சொற்றொடரா என்றால், "இல்லை" என்பதுதான் பதில்.

‘சத்யமேவ ஜயதி’ என்பதுதான் சரியான சொல்.

ஆனாலும், அந்தக் கால ரிஷிகளுக்கு அக்காலத்தில் சில வார்த்தைகளை இனிமை கருதி மாற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டதாம். இந்த முறைக்கு ‘அர்ஷப் பிரயோகம்’ என்று பெயர்.


இந்தப் பிரயோகத்தை ரிஷிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். சாதாரண மனிதர்கள் பயன்படுத்தக் கூடாது.


‘சத்யமேவ ஜயதே’ என்பது ரிஷிகளின் வேதவாக்கு. எனவே அதை அப்படியே உச்சரிக்கிறோம்.

விரதமும், விருந்தும்

குறிப்பிட்ட சில நாட்களில் பட்டினி விரதம் இருப்பதும், விரதம் முடிந்ததும் விருந்து சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. இது ஏன்?

எல்லா மனிதர்களாலும் எப்போதும் விரதம் இருக்க முடியாது. அதை படிப்படியாக பழக்கப்படுத்திக் கொள்ளவே சாஸ்திரம் குறிப்பிட்ட சில நாட்களை விரத நாட்களாக குறிப்பிடுகிறது.

தெய்வத்திற்குப் பிரியமானது என்றால் இயல்பாகவே நல்லதைச் செய்யும் மனப்பான்மை நமக்குள் வந்து விடுகிறது. அத்தகைய பண்பை வளர்த்துக் கொள்ளவே விரதங்கள் பயன்படுகின்றன.

அதே நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விருந்து.

மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப் பழக்குவதே பண்டிகை கால விருந்துகள்.

மானும், மீனும்

அம்பாளின் கண்களை ‘மீன்’ போன்று இருப்பதாகத்தான் வர்ணிப்பார்கள்.

எனவேதான் மதுரையில் ஆட்சி செய்யும் அம்பிகைக்கு ‘மீனாட்சி’ என்றும், ‘அங்கயற்கண்ணி’ என்றும் பெயர் ஏற்பட்டது.

அபிராமி அந்தாதியில் அம்பிகையை வர்ணிக்கும் அபிராமிபட்டர் ‘அம்பிகைக்கு மானின் விழியைப் போன்ற கண் இருப்பதாக’ வர்ணிக்கிறார்.

நூறு பாடல்களைக் கொண்ட அபிராமி அந்தாதியின் நூறாவது பாடலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

விடங்கலிங்கம் கதை தெரியுமா?

சிவலோகத்தில் சிவனின் விடங்க லிங்கம்(மிகச் சிறிய லிங்கம்) இருந்தது. இது பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

இந்திரன் ஒரு முறை சிவனின் விடங்க லிங்கத்தை யாசித்தான். இந்த லிங்கத்தை யோக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் அதை அவனிடம் கொடுத்துவிட்டார்.

அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.

ஒரு சமயம் இந்திரன் வாலாசுரன் என்ற அசுரனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாகச் சொல்லியிருந்தான்.

பூலோகத்தை ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, வாலாசுரனை அழிக்க இந்திரனுக்கு உதவி செய்தார்.

தான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “அவருக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான் இந்திரன்.

அவர் இந்திரனிடம் சாமர்த்தியமாக அவன் தினமும் பூஜை செய்யும் விடங்க லிங்கத்தைக் கேட்டார்.

இந்திரனோ, நிஜ லிங்கத்திற்கு பதிலாக முசுகுந்தனை ஏமாற்றி வேறு 6 லிங்கங்களை கொடுத்தான்.

இதையறிந்த முசுகுந்தன் விடங்க லிங்கத்தை அவன் தரவில்லை என்பதை தாரத்துடன் நிரூபித்து, வாக்குக் கொடுத்தால் அதன்படி சரியாக நடக்க வேண்டும் என்று இந்திரனை எச்சரித்து விடங்க லிங்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்த ஏழு லிங்கங்களை திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு கோவில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் முசுகுந்தன்.

பெருமாள் கோவிலில் பவுர்ணமி வலம்

சிவத்தலங்களில் மலைக்கோவிலாக அமைந்த திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற கோவில்களில் பவுர்ணமியின்போது கிரிவலம் செல்வது வழக்கம்.

ஆனால் மதுரை கூடலழகர் கோவில் மலைக்கோவிலாக இல்லாவிட்டாலும் பவுர்ணமியின்போது இங்கும் கிரிவலம் நடக்கிறது.

சுவாமி சன்னதியைச் சுற்றி 108 முறை வலம் வருகின்றனர்.

இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால், பக்தர்கள் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மந்திரம் ஓதி 108 முறை வலம் வந்து நாராயணனை வழிபடுகின்றனர்.

இறைவன் தரும் பாதுகாப்பு வளையம்

நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும், அது இறைவனுக்குச் செய்வதாகவே நினைத்துச் செய்யுங்கள்.

அதை அவருக்கே அர்ப்பணம் செய்து விடுங்கள்.

உங்களுடைய எண்ணம், சொல், செயல்கள் எப்போதும் தூய்மையாகவும், சிறப்பானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டுங்கள்.

உங்களுக்கு எத்தகைய சிறிய பொருள்கள் கிடைப்பதாக இருந்தாலும் அது அவரது அருளால் மட்டுமே கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்களது எண்ணத்தையும் அவரிடமே ஒப்படைத்து விடுங்கள்.

அதில் எப்போதும் அவரது நினைவை மட்டுமே கொண்டவராக இருங்கள்.
உங்களது பிரார்த்தனையை கேட்கும் அவர், அனைத்தும் நல்லதாகவே நடக்க அருள் புரிவார்.

இறைவன் ஒவ்வொருவரையும் இடைவிடாமல் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

பின்னால் வந்தாலும், அவரே நீங்கள் முன்னால் செல்வதற்கு வழி காட்டுபவராகவும் இருக்கிறார்.

அவரது அருளே உங்களைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக இருக்கிறது.
இறைவனுடைய அருளாகிய ஒளி மட்டுமே, அனைவரது இதயத்திற்கும் ஒளி என்னும் அறிவைத் தருவதாக உள்ளது.

உலகம் மீது கருணையும், இரக்கமும் கொண்டு காப்பவராக இருக்கும் இறைவனே அனைத்திலும் அனைத்துமாக இருக்கிறார்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டு அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும்.

பெண்ணைப் பெற்றால் மோட்சம்


பெண் குழந்தை என்றாலே ஓடிப் போகிறார்கள் பெற்றவர்கள். காரணம், அவளைத் திருமணம் செய்து கொடுக்க பெரும் பொருள் சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே என்ற பயத்தால்தான்.

ஆனால், பெண்ணைப் பெற்று சிரமப்பட்டு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

திருமணத்தின்போது பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கும்போது, புரோகிதர் ஒரு மந்திரம் சொல்வார். அதன் பொருள் என்ன தெரியுமா?

“மகளே.. நீ எப்போதும் என் எதிரில் காட்சி தருவாயாக.. நீ அம்பிகையின் அருள் பெற்ற உத்தமி. உன் இரு புறத்திலும் அந்த அம்பிகை காட்சியளிக்கிறாள். நீ எனக்கு எல்லா வகையிலும் பெருமையைக் கொடு. மிகச் சிறந்தவனான இந்த மணமகனுக்கு நான் உன்னைத் தானம் அளிப்பதால், நான் நற்கதியை அடைவேன். மோட்சத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலியாகத் திகழ்கிறேன்..” என்று ஒரு தந்தை சொல்வதைப் போல் அமைகிறது.

இனியாவது 'பெண்ணைப் பெற்றால் போண்டி' என்று சொல்லாதீர்கள்.

சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

சிலர் கோயிலுக்கு வந்தால் தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்கின்றனர்.

இவை தெரியாத சிலர் “சுவாமி பெயருக்குச் செய்யுங்கள்” என்கின்றனர்.
இதில் எது சரியான முறை தெரியுமா?

எந்தச் செயலைத் தொடங்கினாலும், “இறைவன் திருவருளை முன்னிட்டு இன்ன நன்மைக்காக, இன்னாருடைய விருப்பத்தின் பொருட்டு, இதைத் தொடங்குகிறேன்” என்று இறைவனிடம் விண்ணப்பிப்பதே அர்ச்சனையின் நோக்கம்.

இதையே ‘சங்கற்பம் செய்து கொள்ளுதல்’ என்று சொல்கிறார்கள்.

ஆகவே நமது பெயருக்குத்தான் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இதுதான் முறை என்கிறார்கள் பெரியோர்கள்.

இதுதான் பக்தி!

இதுதான் பக்தி!


கேரள மாநிலம் குருவாயூரில் வசித்த நாராயணபட்டாத்ரி என்பவர் பெருமாளின் தீவிர பக்தர்.

பெருமாள் குறித்து 'நாராயணீயம்' என்னும் நூலை எழுதியவர்.

நாராயண பட்டாத்ரியின் பெருமைகளைக் கேட்ட குட்டப்பன் என்னும் பக்தன் அவரிடம் சீடனாகப் பணியாற்ற விரும்பி அவரைச் சந்தித்தான்.

அவனைக் கண்ட நாராயணர், “என்னப்பா வேண்டும்?” என்றார். குட்டப்பன் பணிவாக, “சுவாமி நான் தங்களுக்குச் சேவை செய்ய ஆர்வத்துடன் இருக்கிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்..” என்றான்.

“அப்படியா.. நீ என்ன படித்திருக்கிறாய்..” என்றார் நாராயணர். தான் படிக்கவில்லை என்றான் வந்தவன். “கல்வியறிவில்லாதவன் எனக்கு சீடனாக இருக்க முடியாது. எனவே, சமையற்கட்டில் உதவியாக வேலை செய்..” என்று சொல்லிவிட்டார் நாராயணர்.

எந்த வகையிலாவது குருவிற்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததே என மகிழ்ந்து சமையற்கட்டு வேலைகளை கவனித்தான் குட்டப்பன்.

ஒரு நாள் அவன் நாராயணரிடம், “குருவாயூரப்பன் எப்படியிருப்பார்..” எனக் கேட்டான். அவர் எரிச்சலுடன், “எருமை வடிவில் இருப்பார்..” என்று சொல்லிவிட்டார்.

குரு சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிய சீடன் குருவாயூரப்பனை எருமையாகவே பாவித்து வணங்க ஆரம்பித்துவிட்டான்.

ஒரு முறை நாராயண பட்டாத்ரி கோவிலுக்குச் சென்றபோது தானும் உடன் வருவதாகச் சொல்லி சென்றான் குட்டப்பான்.

அப்போது உற்சவரை வீதியுலா கொண்டு செல்வதற்காக சன்னதிக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அப்போது குட்டப்பன் நாராயணரிடம், “சுவாமியின் கொம்பு இடிக்கிறது. அதனால்தான் வெளியே கொண்டு வர முடியவில்லை” என்றான்.

அதிர்ந்து போன நாராயணர், கருவறையின் உள்ளே கவனித்தபோது சுவாமி எருமை வடிவில் காட்சி தந்தார்.

தவறை உணர்ந்த நாராயணர் இறைவனுக்கு கல்வி, ஜாதி, தகுதி என எந்தப் பேதமுமில்லை என்பதைப் புரிந்து கொண்டு தனது சீடனின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினார்.

‘ஓம்’ என்ற மந்திரம்














‘ஓம்’ என்பதை பிரணவ மந்திரம் என்பர்.



பிராணனை(உயிர்) காக்கும் மந்திரம் என்று இதைச் சொல்லலாம்.



‘ஓம்’ என அழுத்தம், திருத்தமாக மனதை ஒருநிலைப்படுத்திச் சொல்லிப் பாருங்கள். அடி வயிறுவரை மூச்சுக் காற்று சென்று திரும்பவும் வெளி வருவதுபோல் இருக்கும். எனவே மந்திரங்களின் முன்னால் ‘ஓம்’ என்று சேர்த்துக் கொள்கிறார்கள்.


இதைச் சொல்வதால் ஆயுள் விருத்தியடையும். மனம் கட்டுப்படும். ‘அனைத்தும் நானே’ என்று இறைவன்(முருகன்) சொல்கிறான். அந்தப் பொருளுக்குரிய பதமும் ‘ஓம்’ என்பதுதான்.